Published : 12 Feb 2024 06:10 AM
Last Updated : 12 Feb 2024 06:10 AM

திருவள்ளூர் | இரவில் வீடு புகுந்து கப்பல் மெக்கானிக் படுகொலை: மர்ம நபருக்கு போலீஸார் வலைவீச்சு

திருவள்ளூர்: ஆவடி அருகே இரவு நேரத்தில் வீடு புகுந்து கப்பல் மெக்கானிக்கை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (65). இவர் சென்னை துறைமுகத்தில் கப்பல் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி சியாமளா, மகள்கள் பிரமோனிகா, தீட்சிதா மற்றும் மாமியார் விஜிமோனி ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், மாதவனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி, மாமியார் மற்றும் மகள்கள் ஆகியோர் அந்த நபரைத் தடுக்க முயன்றனர். அவர்களையும் மர்ம நபர் தாக்கினார்.

அவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த திருமுல்லைவாயல் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாதவன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த மாதவனின் மனைவி, மகள்கள் மற்றும் மாமியார் ஆகியோர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்தும், தப்பி ஓடிய மர்ம நபர்குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x