Published : 05 Feb 2024 06:08 AM
Last Updated : 05 Feb 2024 06:08 AM

பப்ஜி கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை: நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவரான மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோடம்பாக்கம், வெங்கடேஷ்வரா நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (22). சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பி.காம் முதலாமாண்டு படித்துவந்தார். பகுதி நேரமாக உணவு விநியோக ஊழியராகபணியாற்றினார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் செல்போனில் வெகு நேரமாக பப்ஜி கேம் (பப்ஜி விளையாட்டு) விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த அவரது தாய் கண்டித்தாராம். பின்னர் அவரது குடும்பத்தினர் தங்களது பணியை கவனிக்க வெளியே சென்று விட்டனர். பிரவீன்மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், மதியம் அவரது சகோதரர் வீடு வந்து பார்த்தபோது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரவீன் தூக்கிட்ட நிலையில் இருந்தார்.மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x