Published : 16 Dec 2023 05:20 AM
Last Updated : 16 Dec 2023 05:20 AM

உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டு சிறை

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்துஎம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014-ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்எல்ஏ மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த சம்பவம் நடைபெற்றபோது ராம்துலார் கோண்ட் எம்எல்ஏவாக இல்லை.

இந்நிலையில் அவர் கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று சட்டப் பேரவை உறுப்பினராக பொறுப்பேற்று இருப்பதால், இந்த வழக்கு எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் ராம்துலார் கோண்ட், குற்றவாளி என மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ராம்துலாருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால், அவர் எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார்.

தண்டனை விவரத்தை,பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞர் விகாஸ் ஷாக்யா தெரிவித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் கூறும்போது, “இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது எம்எல்ஏ கோண்ட், எங்கள் குடும்பத்தாருக்கு அதிக தொல்லை கொடுத்து வந்தார். வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று அவரது ஆட்கள் மிரட்டி வந்தனர். இந்நிலையில் வழக்கில் தீர்ப்பு வெளியாகி, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் நீதி வென்றுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x