திருப்பூரில் அரசுப் பள்ளி வளாகத்தில் பெண் கொலை

திருப்பூரில் அரசுப் பள்ளி வளாகத்தில் பெண் கொலை
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வு அறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. பள்ளியின் பின்புறத்தில் தகரத்தில் கொட்டகை அமைத்து கட்டிடத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.

நேற்று வழக்கம்போல மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபோது, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் துர்நாற்றம் வீசியது.

ஆசிரியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. ஆசிரியர்கள் அளித்த தகவலின்பேரில் நல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் முகம் சிதைந்திருந்ததால், அடையாளம் காணமுடியவில்லை. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு நல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in