சிதம்பரம் அருகே பள்ளி வேன் பற்றி எரிந்து விபத்து - 14 மாணவர்கள் பத்திரமாக மீட்பு

சிதம்பரம் அருகே பள்ளி வேன் பற்றி எரிந்து விபத்து - 14 மாணவர்கள் பத்திரமாக மீட்பு
Updated on
1 min read

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலையில் சென்ற பள்ளி வேனில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வேனில் இருந்த 14 மாணவர்கள் வெளியேறியதால் அனைவரும் உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தில் பிரபல சி.பி.எஸ்.இ தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று (அக்.26) காலை பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றது. இதில் 14 மாணவர்கள் இருந்தனர்.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் என்ற இடத்தின் அருகே சென்றபோது பள்ளி வேனின் முன்புறத்தில் இருந்து லேசான புகை ஏற்பட்டது. பின்னர் புகை வேகமாக பரவியதால் பேருந்தில் இருந்த மாணவர்களை ஓட்டுநர் முருகன் பாதுகாப்பாக கீழே இறக்கினார். இதையடுத்து, சிறிது நேரத்தில் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும், தீ மளமளவென பரவியது. இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

பின்னர் இது குறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்தில் தனியார் பள்ளி வேனின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்து நாசமானது. பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in