Published : 06 Oct 2023 04:00 AM
Last Updated : 06 Oct 2023 04:00 AM

முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு: அதிமுக ஐ.டி பிரிவு நிர்வாகி கைது

பொள்ளாச்சி: முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக வந்த வீடியோவை மறு பதிவு செய்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

தலையில் மது பாட்டில் வைத்துக்கொண்டு தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேசியபடி சாலையில் சென்ற நபரை வீடியோவாக எடுத்து சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இந்த வீடியோவை பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பி.அருண்குமார் (30), மறு பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து, திமுகவை சேர்ந்த ஷாந வாஸ் என்பவர் அளித்த புகாரின் பேரில், அருண்குமார் மீது அவதூறு பரப்புதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் சமூக வலைதளத்தில் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அருண்குமார் கைது செய்யப்பட்டார். இதையறிந்த பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ மற்றும் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வீடியோவை எடுத்தவர், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குரல் எழுப்பினர்.

இது குறித்து விசாரித்து வருவதாகவும் அவதூறு பதிவிட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x