நெல்லையில் இளம் பெண் கொலை: கிராம மக்கள் 2-வது நாளாக சாலை மறியல்

திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்டை - சேரன்மகாதேவி சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பணிகரிசல்குளம் கிராம மக்கள். படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்டை - சேரன்மகாதேவி சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பணிகரிசல்குளம் கிராம மக்கள். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி: நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினர்களும், கிராம மக்களும் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி அருகே உள்ளதிருப்பணிகரிசல் குளத்தைச் சேர்ந்த சந்தியா(18) என்றஇளம்பெண், நேற்று முன்தினம்அவர் பணிபுரியும் கடையின் குடோனில் கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் இந்த கொலைசம்பவம் நடைபெற்றது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தனிப்படை அமைத்து, சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனைக் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்நிலையில், திருப்பணிகரிசல்குளம் ஊர் மக்களும், சந்தியாவின் உறவினர்களும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பணிகரிசல்குளம் கிராமத்தில் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கிராம மக்கள் அங்கிருந்து 5 கி.மீ. தொலைவுக்கு ஊர்வலமாக வந்து பேட்டை-சேரன்மகாதேவி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர் பெனட் ஆசீர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க பரிந்துரைக்கப்படும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதல்கட்ட நிதி உடனடியாக வழங்கப்படும், அரசு சார்பில் 3 சென்ட் இடம்வழங்கி அதில் வீடு கட்டவும், உயிர்இழந்த பெண்ணின் பெற்றோரில் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

எனினும், ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் அரசு சார்பில் வழங்க வேண்டும். அரசு வேலைக்கான ஒப்புதல் கடிதத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும். கொலை செய்தவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் பணிபுரியும் நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். இது தொடர்பாக உயரதிகாரிகளிடம் பேசி, தக்க நடவடிக்கைஎடுப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலைக்கைவிட்டனர். அதேநேரத்தில், சந்தியாவின் உடலை வாங்க மறுத்து, திருப்பணிகரிசல்குளத்தில் உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in