மதுரை பெண் காவலர் தற்கொலையால் விரக்தி: கோவில்பட்டியில் உயிரை மாய்த்துக் கொண்ட ரயில்வே போலீஸ்

சொக்கலிங்க பாண்டியன்
சொக்கலிங்க பாண்டியன்
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மதுரை - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் சடலமாகக் கிடந்துள்ளனர்.

இது பற்றி தகவலறிந்த சமயநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, உடல்களை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், அவர் திருப்பாலையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (30) மற்றும் அவர்களது மகன் காளிமுத்து ராஜா (9), மகள் பவித்ரா (11) எனத் தெரிந்தது.

ஜெயலட்சுமி மதுரை ரயில்வே காவல் பிரிவில் கிரேடு- 1 காவலராக பணிபுரிந்துள்ளார். மருத்துவ விடுமுறையில் இருந்த நிலையில், தனது 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலையால் இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சமயநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று 21-ம் தேதி இரவு சாத்தூர் - நள்ளி ரயில் நிலையம் இடையே திருச்செந்தூர் - சென்னை விரைவு ரயில் முன் பாய்ந்து ஆண் ஒருவர் அடிபட்டு இறந்ததாக சாத்தூர் ரயில் நிலைய அதிகாரி கொடுத்த தகவல் மூலம் உதவி ஆய்வாளர் மகா கிருஷ்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தார்.

விசாரணையில் இறந்தவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் என்பதும் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை ஹவில்தாராக பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர், முன்னதாக மதுரை ரயில் நிலையத்தில் பணிபுரிந்தபோது பெண் காவலர் ஜெயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை பெண் காவலர் மதுரை அருகே ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து சொக்கலிங்க பாண்டியன் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவு சொக்கலிங்க பாண்டியன் தனது அண்ணனுக்கு செல்போனில் தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேற்படி சம்பவம் பற்றி இறந்தவரின் அண்ணன் சச்சிதானந்த பாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in