Last Updated : 08 Sep, 2023 02:23 PM

 

Published : 08 Sep 2023 02:23 PM
Last Updated : 08 Sep 2023 02:23 PM

புதுச்சேரி அருகே ரவுடி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

மணிமாறன்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பிறந்தநாளிலேயே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் மணிமாறன் (எ) டூம் மணி (34). ரவுடியான இவர் மீது முத்தியால்பேட்டையைச் சேர்ந்த அன்பு ரஜினி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த மணிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இதற்கிடையே அன்பு ரஜினி கொலைக்கு பழிக்குப் பழியாக மணிமாறனை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டது. இதனையறிந்த மணிமாறன் அந்த கும்பலுக்கு பயந்து கடந்த சில மாதங்களாக மடுகரை பகுதியில் உள்ள தனது நண்பரின் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார். மேலும் அங்கிருந்த படியே கரும்பு வெட்டும் வேலைக்கும் சென்று வந்தார்.

இந்நிலையில் இன்று மணிமாறன் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள தோப்பு பகுதிக்கு சென்று பின்னர் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். மடுகரை தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது திடீரென காரில் 5 பேர் கொண்ட கும்பல் காரை நிறுத்தி கத்தி, அரிவாள் உள்பட ஆயுதங்களுடன் இறங்கினர். இதனைக் கண்ட மணிமாறன் அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் மணிமாறனை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றது. உயிர் பிழைக்க மணிமாறன் அங்குள்ள ஒரு வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்தார். அப்போது அந்த கும்பல் மணிமாறனை சரமாரியாக வெட்டியது. இதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதன் பின்னர் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றுவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மடுகரை மற்றும் நெட்டப்பாக்கம் போலீஸார் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து மணி மாறனை கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர். மேலும், முன்விரோதமா ? அல்லது வேறு காரணமா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மணிமாறனுக்கு இன்று பிறந்த நாள் என்று சொல்லப்படும் நிலையில், பிறந்த நாளிலேயே அவரை கொலை செய்த சம்பவம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x