Published : 07 Sep 2023 06:27 AM
Last Updated : 07 Sep 2023 06:27 AM

‘பிகில்’, ‘தெறி’ பட நடிகரிடம் பண மோசடி: போலீஸார் விசாரணை

சென்னை: துணை நடிகரிடம் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் வசிப்பவர் ஆத்மா பேட்ரிக் (42). இவர் விஜய் நடித்த ‘பிகில்’, ‘தெறி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அசோக் நகரைச் சேர்ந்த அனிதா சுரேஷ் மற்றும் சுரேஷ் ராமநாதன் ஆகியோர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு நடிகர் பேட்ரிக்கிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதை நம்பி அவர் ரூ.53 லட்சம் முதலீடு செய்துள்ளார். அந்த பணத்தை அவர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பேட்ரிக் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் நடிகர் பேட்ரிக், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கமல்தாஸ் மற்றும் ஆனந்த் ஆகியோரை அணுகி பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுள்ளார். இவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இருவரும் ரூ.7 லட்சம் கமிஷன் கொடுத்தால் பணத்தை திரும்பப் பெற்றுத்தர உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து முன்பணமாக அவர்களுக்கு ரூ.2.50 லட்சம் மற்றும் தனது காரையும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்களும் உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லையாம். இந்த விவகாரம் தற்போது உயர் அதிகாரிகள் வரை சென்றதால் இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x