Published : 02 Sep 2023 06:38 AM
Last Updated : 02 Sep 2023 06:38 AM

சென்னை | போலியாக ஆவணங்களை உருவாக்கி ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: 5 பேர் கைது

சென்னை: ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். வழக்கறிஞரான இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதில், ``கோடம்பாக்கம் வாசுதேவன் நகரில் எனக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது.

அதை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது இடத்தை மீட்டுத் தர வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஆரோக்கியம், உதவி ஆணையர் ராஜ்பால் மேற்பார்வையில் ஆய்வாளர் பெமிலா ஷெர்லி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் வளசரவாக்கம் ரவி (58), அடையாறு பாஸ்கர் (56), குன்றத்தூர் சுரேஷ் (38), குரோம்பேட்டை மனோகரன் (56), கே.கே.நகர் ஆனந்தன் (58) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

இவர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி, அதன் மூலம் நில அபகரிப்பு செய்து முறையற்ற ஆதாயம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x