ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விநியோகம் - இலங்கை நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேர் கைது

தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி  அருகே காரில் கடத்தி வரப்பட்ட  கஞ்சா மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய இலங்கையைச் சேர்ந்த நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா அதிகளவில் கடத்தப்படுகிறது. கஞ்சா கடத்தலை தடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சிவசுப்பு தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

தனிப்படை போலீஸார் கடந்த 28-ம் தேதி மாலை, தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கை நடத்தினர். அப்போது, ஒன்றன்பின் ஒன்றாக வந்த 2 கார்களில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 228 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 கார்களிலும் இருந்த 2 பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாமக நிர்வாகி: கைதானவர்களில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஆரோன்(31) என்பவர் கஞ்சா கடத்தல் சம்பவங்களில் மூளையாக செயல்பட்டுள்ளார். சாத்தான்குளத்தில் 2,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கிலும் இவருக்கு தொடர்புள்ளது.

இலங்கையைச் சேர்ந்த, தற்போது சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஜோசப் ஸ்ரீபாலன் கெனியு பினிஷ்(63) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இவர் செய்து கொடுத்துள்ளார். இவர் மீது இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கு இருப்பதாகவும், இவரை மத்திய `ரா' உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மூக்காண்டி என்ற ராஜா(30) என்பவர் பாமக இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். இவரது தந்தை சின்னத்துரையும் பாமகவில் பொறுப்பில் இருக்கிறார். வழக்கறிஞர் ஒருவரும், சட்டக்கல்லூரி மாணவி ஒருவரும் கைதாகியுள்ளனர்.

முற்றிலும் ஒழிப்போம்..: இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து, இங்கிருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி வந்துள்ளனர். ஒரே நேரத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், இலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பலின் நெட்வொர்க்கை போலீஸார் உடைத்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்.பி. பாலாஜி சரவணன் கூறும்போது, “மிகப்பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கஞ்சா கடத்தலுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கை. கஞ்சா மற்றும் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க காவல் துறையின் நடவடிக்கை தொடரும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in