

சென்னை: தி.நகரைச் சேர்ந்தவர் அலோக்குமார் சதுர்வேதி (60). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் இடம் ஒன்று இருந்தது.
அதை சிலர் போலி ஆவணம் தயார் செய்து, அதன் மூலம் விற்பனை செய்துள்ளனர். எனவே, எனது இடத்தை மீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, நில மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சென்னை எம்ஜிஆர் நகர், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (50), மயிலாப்பூரைச் சேர்ந்த பார்வதி (46) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.