

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் புதிய வீட்டுக்கு வரி நிர்ணயிக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய 2 ‘பில் கலெக்டர்களை’ லஞ்சஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
தேவகோட்டை 25-வது வார்டைச் சேர்ந்த வன்மீகநாதன் தனது புதிய வீட்டுக்கு வரி நிர்ணயிக்க நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் ‘பில் கலெக்டர்கள்’ மதன்குமார், பாண்டித்துரை ஆகியோர் புதிய வரி நிர்ணயிக்க ரூ.5,000 லஞ்சம் கேட்டனர்.
இதையடுத்து வன்மீகநாதன் சிவகங்கை லஞ்சஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். பின்னர் அவர்களது ஆலோசனை பேரில், நேற்று தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் ரசாயன மை தடவிய ரூ.5,000-த்தை மதன்குமார், பாண்டித்துரை ஆகியோரிடம் வன்மீகநாதன் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் மதன்குமார், பாண்டித்துரை ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.