Published : 19 Aug 2023 04:32 AM
Last Updated : 19 Aug 2023 04:32 AM

சென்னையை கலக்கிய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை - 7 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

ஆற்காடு சுரேஷ்

சென்னை: சென்னையை கலக்கிய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (44). பிரபல ரவுடியான இவர் மீது, வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் ரவுடிகள் ராதாகிருஷ்ணன், புளியந்தோப்பு சின்னா கொலை உட்பட 7 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி வழக்குகள் என 38-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு, ஏ பிளஸ் ரவுடி பட்டியலில் இருந்த இவர், 15 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.

எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து, திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டைக்கு இடம் பெயர்ந்தார். பின்னர், வேலூரில் பதுங்கியிருந்தார்.

இந்நிலையில், குற்ற வழக்கு விசாரணைக்காக நேற்று எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்தார். அதன்பின், நண்பர் மாதவன், தனது வழக்கறிஞர் ஆகியோருடன் நேற்று மாலை பட்டினப்பாக்கத்துக்கு காரில் சென்றார். அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பட்டப்பகலில் நடந்த சம்பவம்: அப்போது, அவரை பின் தொடர்ந்து காரில் வந்த 7 பேர் கும்பல், கண் இமைக்கும் நேரத்துக்குள் அரிவாள், பட்டா கத்தியால் சுரேஷை சரமாரியாக வெட்டியது. உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தவரை விரட்டி சென்று வெட்டியது. அவரது நண்பர் மாதவனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர், அந்த கும்பல் காரில் தப்பிவிட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில்பட்டப்பகலில் ரவுடி வெட்டி சாய்க்கப்பட்டதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பட்டினப்பாக்கம் போலீஸார், வெட்டுக் காயங்களுடன் கிடந்த ஆற்காடு சுரேஷ், மாதவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஆற்காடு சுரேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாதவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தப்பியோடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷ் பின்னணி: சென்னையில் மிகப்பெரிய தாதாவாக வலம் வந்த அயோத்திகுப்பம் வீரமணி, பங்க் குமார்உள்ளிட்டோருக்கு மாற்றாக வந்தவர்தான் ரவுடி சின்னா. அவரையே கொலை செய்தார்ஆற்காடு சுரேஷ். அடைமொழிக்காக, தனது சொந்த ஏரியாவான ஆற்காட்டை பெயருடன் இணைத்துக் கொண்டார். சென்னையில், ஆரம்பத்தில் கேட்டரிங் தொழில் செய்து வந்த இவர், சைதாப்பேட்டையை சேர்ந்த சுகு என்பவருடன் சேர்ந்துள்ளார். 2002-ல் விஜயவாடாவில் நடந்த கொலையில் ஈடுபட்டார். அடுத்தடுத்து பல கொலை வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.

2010-ல் பிரபல ரவுடியான சின்னா, அவரது வழக்கறிஞர் பகவத் சிங் ஆகியோரை கொலை செய்தார். கடந்த 2021-ல் புளியந்தோப்பில் கூட்டாளிகளுடன் துப்பாக்கி முனையில் ஆற்காடு சுரேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். இந்நிலையில், சென்னை வந்தவர் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x