

மதுரை: மதுரை எல்லீஸ் நகர் போடி ரயில்வே லயனை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கார் ஓட்டுநர். இவருக்கும் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த அழகுப்பிரியா (22) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணிகண்டனின் தாயார் மயிலம்மாள் உடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் வேலைக்கு வெளியூர் சென்றார். நேற்று மாலை வீட்டுக்கு அருகே திறந்தவெளியில் மயிலம்மாள், அழகுப்பிரியா இருவரும் கழுத்தறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
தகவலறிந்த எஸ்.எஸ்.காலனி போலீஸார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சந்தேகத்தின் பேரில் மணிகண்டனின் அக்காள் மகாலட்சுமியின் மகன் குணசீலன்(20), அவரது நண்பர் ரிஷி(20) ஆகியோரைப் பிடித்து எஸ்.எஸ். காலனி போலீஸார் கொலைக்கான காரணம் என்னவென்று விசாரிக்கின்றனர்.