ஊத்துக்குளி அருகே மது போதைக்கு அடிமையான மகன் கொலை: பெற்றோர் கைது

ஊத்துக்குளி அருகே மது போதைக்கு அடிமையான மகன் கொலை: பெற்றோர் கைது
Updated on
1 min read

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே தாட்கோ பகுதியை சேர்ந்த தம்பதி செல்வராஜ், சாந்தாமணி. இவர்களின் மகன் மணி கண்டன் (26), குடிப்பழக்கத்துக்கு அடிமையான நிலையில், சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

பெற்றோர் தினக் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தனர். குடி போதையில் வீட்டில் ரகளை செய்து வந்த மணிகண்டன், கடந்த ஒரு வாரமாக பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்தாராம். நேற்று காலை குடி போதையில் இருந்த மணிகண்டன், பெற்றோரிடம் ரகளை செய்துவிட்டு உறங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்த பெற்றோர், கட்டையால் அடித்ததில் மணிகண்டன் உயிரிழந்துள்ளார். கொலையை மறைக்க மகனை 2 பேர் கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு விட்டுச் சென்றதாக ஊத்துக்குளி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

போலீஸார் விசாரித்ததில், குடி போதையில் தங்களை அடித்து கொடுமைப்படுத்தியதால், மகனை கொலை செய்ததை பெற்றோர் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கொலை வழக்கு பதிந்து, செல்வராஜ், சாந்தாமணி தம்பதியை ஊத்துக்குளி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in