Published : 11 Aug 2023 04:10 AM
Last Updated : 11 Aug 2023 04:10 AM

நாங்குநேரியில் அண்ணன், தங்கைக்கு அரிவாள் வெட்டு - பள்ளியில் நடந்த பிரச்சினை காரணமா?

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.

இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து இவர்களது மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதை யடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு மகனை பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு சென்றவரிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர்.

அப்போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாங்குநேரியிலுள்ள வீட்டில் அம்மாணவரும், அவரது தங்கையும் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நாங்குநேரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் விரைவாக சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதை கண்டித்து பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அண்ணன், தங்கையின் உறவினர் கிருஷ்ணன் (59) என்பவர் திடீரென்று சாலையில் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வள்ளியூர் பள்ளியில் நடந்த மோதல் தொடர்பாக நாங்குநேரியில் வீடு புகுந்து அண்ணன். தங்கை வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x