

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவை சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது ஹிஜாவு நிதி நிறுவனம். 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும் நான்காவது குற்றவாளியுமான சவுந்தரராஜன் என்பவர் ஜாமீன் கோரி சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கருணாநிதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், "சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளனர். 16,500 நபர்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளனர். 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மனுதராருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாடு தப்பிசெல்லவும் சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் மீட்கப்பட வேண்டிய தொகையும் அதிகம், என்பதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதிட்டார். அரசு தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.