

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியைசேர்ந்தவர் செந்தில்நாதன் (43). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று மகன்கள். செந்தில்நாதன் ஸ்ரீவைகுண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை முறுக்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை, 3 பேர் கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
ஸ்ரீவைகுண்டம் போலீஸார் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கொலை சம்பவத்தில் 3 சிறுவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. பிளஸ் 1 மாணவர்களான 2 சிறுவர்களை நேற்று போலீஸார் கைது செய்தனர். மற்றொரு சிறுவர் மற்றும் அவர்களை தூண்டிவிட்ட ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
செந்தில்நாதனின் மகனுக்கும், பள்ளியில் அவனுடன் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே விரோதம் இருந்துள்ளது. செந்தில்நாதன் தனது மகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து செந்தில்நாதனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.