

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த மேலூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது சிலர் ஆபாசமாகவும், அருவெறுக்கத் தக்க வகையிலும், பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையிலும் நடனமாடியுள்ளனர். இதைக் கண்ட சின்ன சேலம் போலீஸார் ஆபாச நடனம் ஆடுவதை நிறுத்த வலியுறுத்தினர். காவல் துறையினரின் உத்தரவை மதிக்காமல் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மேலூரைச் சேர்ந்த ராமன் (48), நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த மதன் (32),மேடையில் ஆபாச நடனமாடிய நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தொல்காப்பியன் (22) , எரவார் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (41) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.