

திருப்பத்தூர்: மதுவை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரிடம் கைபேசியில் பணம் கேட்ட உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பத்தூரைச் சேர்ந்த ரங்கநாதன் (59) என்பவர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 25 ஆண்டுகளாக திருப்பத்தூரில் உளவுத்துறை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுவை பதுக்கிவைத்து விற்பனை செய்யும் நபர் ஒருவரிடம் கைபேசியில் உரையாடிய ரங்கநாதன், அந்த நபர் மது விற்பனை செய்ய தினசரி தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் எனக்கூறிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
இவர் மீது, உளவுத்துறை மேல் அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வந்த நிலையில், திருப்பத்தூர் நகர காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, நகர காவல் நிலையத்தில் ரங்கநாதன் பணியாற்றி வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக காவல் துறை சீருடை அணியாமலேயே பணியாற்றி வந்த ரங்கநாதன் அடுத்த 10 மாதங்களில் பணி ஓய்வு பெறும் நிலையில், தற்போது சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யபட்டதை தொடர்ந்து, காவலருக்கே உரித்தான காக்கி சட்டை, பேன்ட் அணிந்து பணியாற்ற வைத்து விட்டார்களே! என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார்.