கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் கைது

ஜெயபாரத் - தீபக்
ஜெயபாரத் - தீபக்
Updated on
1 min read

கோவை: கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை வடவள்ளி வேம்புநகரை சேர்ந்தவர் ராஜேஷ்(34). இன்ஜினீயரிங் டிசைனர். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், மனைவி லக் ஷயா(30), மகள் யக் ஷிதா(10), ராஜேஷின் தாயார் பிரேமா (73) ஆகியோர் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து வடவள்ளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

கடன் பிரச்சினை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து வடவள்ளி வள்ளலார் நகரை சேர்ந்த ஜெயபாரத் (32) மற்றும் டாட்டா நகரை சேர்ந்த தீபக் (32) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட இருவரும் கணித ஆசிரியர்கள். தனியார் டியூசன் சென்டர் நடத்தி வந்துள்ளனர். இறந்துபோன ராஜேஷ், லக் ஷயா தம்பதிக்கு, ஜெயபாரத் ரூ.25 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

பணத்தை திரும்ப தராததால், நண்பரான தீபக்கை அழைத்துச் சென்று ராஜேஷிடம் பணம் கேட்டு நெருக்குதல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ், தனது மனைவி, மகள் மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்தில் ஒரு செல்போன் மற்றும் தற்கொலை குறிப்புதொடர்பான நோட்டு கிடைத்துள்ளது. அதில், கடன் பணத்தை திரும்ப செலுத்த அவகாசம் வழங்க ஜெயபாரத் மறுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்வதாக எழுதப்பட்டு உள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in