சென்னை | பெண்களை ரகசியமாக படம்பிடித்து ஆபாசமாக சித்தரித்து செயலியில் விற்பனை செய்த பி.டெக். பட்டதாரி கைது

சென்னை | பெண்களை ரகசியமாக படம்பிடித்து ஆபாசமாக சித்தரித்து செயலியில் விற்பனை செய்த பி.டெக். பட்டதாரி கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘கடந்த ஆண்டு தீபாவளிக்காக பிரபல வணிக வளாகத்தில் ஜவுளி எடுக்க சென்றபோது, சிலர் என்னை ரகசியமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அதை ஆபாசமாக சித்தரித்து ‘டெலிகிராம்’ செயலி வழியாக பரப்பி, முறைகேடாக பணம் சம்பாதிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஈரோட்டில் இருந்து இதுபோன்ற குற்றச் செயல்கள் நடைபெறுவது தெரியவந்தது. தனிப்படை போலீஸார் ஈரோடு மாவட்டம் சென்று தீவிர விசாரணை நடத்தி, சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ஆர்யா (22) என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள ஆர்யா, பி.டெக். பட்டதாரி. ஈரோட்டில் தங்கியிருக்கும் இவர், சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்களுக்கு செல்வது வழக்கம். அங்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் செல்போன் மூலம் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அதை ஆபாசமாக சித்தரித்து, டெலிகிராம் செயலியில் உள்ள ஒரு குறிப்பிட்ட குழுவில் பதிவிட்டுள்ளார்.

பிறகு, ஆபாச படங்கள், வீடியோ கேட்பவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, அவற்றை பார்ப்பதற்கான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) கொடுத்துள்ளார். இதுபோல பல பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளார்.

அவரிடம் இருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன், மடிக்கணினி, வங்கி கணக்கு அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுபோல, சென்னை உட்பட பிற பகுதிகளிலும் நடப்பதுதெரியவந்துள்ளது. கடைகளுக்கு செல்லும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து டெலிகிராம் செயலியில் பதிவிட்டு விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in