Published : 12 Jul 2023 06:20 AM
Last Updated : 12 Jul 2023 06:20 AM

சென்னை அருகே 2 மருத்துவர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்த புகாரில் பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

மகிதா அன்னகிருஷ்டி

கூடுவாஞ்சேரி: சென்னை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பெண் மருத்துவர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பெற்ற வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த ஜூன் 30-ம் தேதி காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது காணாமால்போன 17-வயது சிறுமியை சென்னை மீனம்பாக்கத்தை அடுத்த திரிசூலத்தைச் சேர்ந்த ரஞ்சித்(27) என்ற இளைஞர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீஸார் ரஞ்சித்தை பிடித்து சிறுமியை மீட்டனர்.

பின்னர் சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது தன்னை அழைத்து சென்ற ரஞ்சித் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதுகுறித்து சிறுமியின் தந்தை வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரஞ்சித் மீது புகார் கொடுத்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா அன்னகிருஷ்டி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து ரஞ்சித்தை கைது செய்தார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தபோது அந்த சிறுமிக்கு ஏற்கெனவே கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, விதிகளுக்கு மாறாக நடைபெற்ற கருக்கலைப்பு குறித்து 2 பெண் மருத்துவர்களிடம், ஆய்வாளர் மகிதா அன்னகிருஷ்டி மற்றும் வழக்கறிஞர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அரசு பெண் மருத்துவர் ரூ.10 லட்சம், தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் ரூ.2 லட்சம் என மொத்தமாக ரூ.12 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது. இதையேற்று, ரூ.12 லட்சம் பணம் பெண் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜியிடம் 2 பெண் மருத்துவர்களும் புகார் அளித்தனர். அதில், தங்களை மிரட்டி வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா அன்னகிருஷ்டி ரூ.12 லட்சம் பணத்தை வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா அன்னகிருஷ்டியை பணியிடை நீக்கம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x