மயிலாடுதுறை அருகே 2 பேர் சந்தேக மரணம்: டாஸ்மாக் மது அருந்தியதில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை அருகே 2 பேர் சந்தேக மரணம்: டாஸ்மாக் மது அருந்தியதில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடி பிரதான சாலையைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர், மங்கைநல்லூர் பிரதான சாலையில் இரும்பு பட்டறை வைத்து நடத்தி வந்தார். இந்த பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் வழக்கம் போல பட்டறையில் பழனி குருநாதன், பூராசாமி இருவரும் நேற்று மாலை 5 மணி வரை வேலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததை அருகில் இருந்தோர் பார்த்துள்ளனர். அவர்கள் அருகில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் 2 இருந்துள்ளன. ஒருபாட்டில் திறக்கப்படாமலும், மற்றொரு பாட்டிலில் பாதி மதுவும் இருந்துள்ளது.

உடனடியாக அருகில் இருந்தோர் அவர்களை மீட்டுமயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே இருவரும் மதுபானம் அருந்திய சிறிது நேரத்தில் தான் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு நோயோ, குடும்பத்தில் பிரச்சினையோ எதுவும் இல்லை என்றும் அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in