பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் திரைப்பட பாணியில் ரூ.7 கோடி கொள்ளை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் திரைப்பட பாணியில் ரூ.7 கோடி கொள்ளை
Updated on
1 min read

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சிஎம்எஸ் நிறுவனமானது, வெவ்வேறு வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று அந்தந்த வங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு 1 மணி அளவில் 10 பேர் அடங்கிய கும்பல் இந்த நிறுவனத்துக்குள் நுழைந்தது. தூங்கிக் கொண்டிருந்த 2 காவலாளிகளை கட்டிப் போட்டது.

அவர்களிடம் இருந்து துப்பாக் கியை பறித்துக் கொண்டு நிறுவனத்தில் இருந்து ரூ.7 கோடியை கொள்ளையடித்து சென்றது. அப்போது பணியில் இருந்த 5 ஊழியர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பணம் கொண்டு செல்லும் வேனையும் அவர்கள் எடுத்துச் சென்றனர். திரைப்பட பாணியில் 1 மணி நேரத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றினர்.

இந்நிகழ்வு குறித்து காலை7 மணி அளவிலேயே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கொள்ளை குறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

கும்பலில் ஒரு பெண்: இந்நிகழ்வு குறித்து லூதியானா காவல் ஆணையர் மந்தீப் சிங் கூறியதாவது: விசாரணையில் கொள்ளைக் கும்பலில் ஒருவர் பெண் என்றும் அவர்தான் இந்தக் கொள்ளையை வழிநடத்தியதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். மொத்தம் ரூ.7 கோடி கொள்ளை அடிக்கப்பட் டுள்ளது.

அந்நிறுவனத்தில் பாதுகாப்பு அம்சங்களில் பல்வேறு குறைபாடுகள் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணம் லாக்கரில் பூட்டப்படாமல் வெளியே வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். இவ்வாறு காவல் ஆணையர் மந்தீப் சிங் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in