உடல் பாகங்களை நாய்க்கு உணவாக வீசிய கொடூரம் - மும்பை லிவ் இன் இணை கொலையில் அதிர்ச்சி தகவல்கள்

உடல் பாகங்களை நாய்க்கு உணவாக வீசிய கொடூரம் - மும்பை லிவ் இன் இணை கொலையில் அதிர்ச்சி தகவல்கள்
Updated on
1 min read

மும்பை: டெல்லி ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கு போல் மற்றொரு கொலை மும்பையில் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண், மும்பை மீரா சாலை கீதா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்துவந்தார். அவரது குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் வீட்டில் சோதனையிட்ட போலீஸார், மூன்று பக்கெட்களில் இருந்து வெட்டப்பட்ட நிலையில் இருந்த உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.

சரஸ்வதி வைத்யாவின் லிவ்-இன்-பார்ட்னரான 52 வயதான மனோஜ் சஹானியிடம் விசாரித்ததில் சரஸ்வதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டியதாக கூறி அதிரவைத்தார். முதலில் சரஸ்வதி தற்கொலை செய்துகொண்டதாக கூறி போலீஸை குழப்பிய மனோஜ் சஹானி, அதன்பிறகே கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கொல்லப்பட்ட சரஸ்வதியின் உடலை 20 துண்டுகளாக வெட்டியதுடன், சில உடல் உறுப்புகளை பிரஷர் குக்கரில் வேகவைத்து பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி வெளியே வீசியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் உறுப்புகளை மனோஜ் நாய்க்கு உணவாக கொடுத்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மும்பையின் போரிவலி பகுதியை சேர்ந்த மனோஜ் சஹானி ஐடிஐ முடித்துள்ளார். இவருக்கு போரிவலியில் சில வீடுகள் உள்ளன. அவற்றை வாடகை விட்டுள்ளதுடன் அப்பகுதியில் ரேஷன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். சரஸ்வதி வைத்யா ஒரு ஆதரவற்ற பெண். அப்பகுதியில் ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருந்த அவர், மனோஜ் வேலைபார்த்த ரேஷன் கடைக்கு செல்லும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்து, போரிவலியில் சில ஆண்டுகள் தங்கியிருந்துள்ளனர்.

2017ல் இருவரும் மீரா சாலை குடியிருப்புக்கு இடம்பெயர்ந்தாக சொல்லப்படுகிறது. இதனிடையே, நேற்று மாலை அவர்களது குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக எழுந்த புகாரில் வீட்டை போலீஸ் சோதனையிட்ட போது சரஸ்வதி கொலை செய்யப்பட்ட விவரம் வெளியே தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பே இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், சரஸ்வதியின் உடலுடன் வசித்துவந்த மனோஜ், அதனை அப்புறப்படுத்தும் பொருட்டு உடலை துண்டுகளாக வெட்டிவைத்துள்ளார் என்றும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

துர்நாற்றத்தை மறைக்க ஏர் ஃப்ரெஷ்னர்களை குடியிருப்பின் பல பகுதிகளிலும் மனோஜ் மாட்டியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மனோஜை கைது செய்து ஆஜர்படுத்தியதுடன் 16 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in