

புதுடெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 11,793 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,793 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பாதிப்பு 17,073 ஆக இருந்த நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கரோனாவுக்கு ஒரே நாளில் 27 பேர் இறந்துள்ளனர். இதுவரை மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போதைய நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 94,420-லிருந்து 96,700 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 9,486 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,27,97,092 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை மக்களுக்கு 197.31 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 19,21,811 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.