மக்கள் ஊரடங்கு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு; வேலையில்லாத தொழிலாளர்களுக்கு உடனடியாக ரூ.3 ஆயிரம் உதவி: பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் : கோப்புப்படம்
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் : கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் நோய்த் தொற்று சங்கிலியை அறுத்தெறிய பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று பஞ்சாப் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று ஒருநாள் மட்டுமே மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க மத்திய அரசு கூறியுள்ள நிலையில் சூழல் கருதி பஞ்சாப் அரசு மாநிலம் முழுவதும் அடுத்த 9 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

சீனாவில் உருவாகி உலகை ஆட்டிப் படைத்து வரும் கரோனா வைரஸுக்கு உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. உலக அளவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும். தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்தாலும் கரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை. இதுவரை 6 பேரின் உயிரை கரோனா காவு வாங்கியுள்ளது. 364 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். அந்த மாநிலத்தில் கரோனா வைரஸுக்கு இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கனோர் கண்காணி்ப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்கள் ஊரடங்கு கரோனா வைரஸ் பரவதைத் தடுக்க பெருமளவு உதவும் என்று பஞ்சாப் அரசு பெருமளவு நம்புகிறது. இதையடுத்து மக்கள் ஊரடங்கை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் அமரிந்தர் சிங் வெளியிட்ட அறிவிப்பில், “பஞ்சாப் மாநிலத்தில் மக்கள் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் ஊரடங்கில் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அரசின் சேவைகள் கிடைக்கும். கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க கொண்டுவரப்படும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மாநிலத்தில் பால், உணவுப்பொருட்கள், மருந்துக்கடைகள் போன்றவை திறந்திருக்கத் தடையில்லை. இந்த மக்கள் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடுகிறேன்.

மாநிலம் முழுவதும மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்துவிடுவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், உடனடியாக அவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். அவர்களின் வங்கிக்கணக்கில் நாளை டெபாசிட் செய்யப்படும். இதற்காக ரூ.96 கோடி உடனடியாக ஒதுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை துரிதமாக எடுக்க தொழிலாளர் துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in