Published : 22 Mar 2020 02:19 PM
Last Updated : 22 Mar 2020 02:19 PM

தமிழகத்தில் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

வெறிச்சோடி கிடக்கும் சாலை, இடம்: எழும்பூர் ரயில் நிலையம் அருகே.

சென்னை

தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், இன்று (மார்ச் 22) மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, இன்று தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள், பெரும்பாலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இன்று இரவு 9 மணிக்கு நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மார்ச் 22) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க கரோனா நோய் பரவுவதைத் தடுக்க இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன் வந்து மேற்கொண்ட ஊரடங்கு நிகழ்வு பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு நிறைவுற உள்ளது.

இந்த ஊரடங்கு நிகழ்வு மக்களின் நலன் கருதி நாளை (மார்ச் 23) அதிகாலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து நடைபெற எந்தத் தடையும் இல்லை என தெளிவுபடுத்தப்படுகிறது. இத்தொடர் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x