கரோனா அச்சம்: கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

தமிழகத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேச எல்லைகளை இணைக்கும் தமிழக எல்லைகள் மூடப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால், அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள், இதர சரக்கு வாகனங்கள், தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காகப் பயணிக்கும் பயணிகளின் இலகு ரக வாகனங்கள், பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் உள்ளிட்டவை இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகா செல்லும் பேருந்துகள் சேவை இன்று (மார்ச் 21) காலை முதல் நிறுத்தப்பட்டது. அதேபோன்று, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் அம்மாநிலப் பேருந்துகள், கர்நாடகா எல்லையான அத்திபள்ளியுடன் திருப்பி அனுப்பப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in