

சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.11ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 51 நாடுகளில் இருந்து 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதுகுறித்து, இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் தலைவர் சிவன் கண்ணன், துணை தலைவர் ஆனந்த குமார் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில் படங்கள் அனைத்தும் சென்னை பிவிஆர் சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படும். இந்த திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி டிச.11-ம் தேதி மாலை, பிவிஆர் சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ் திரைப்படப் போட்டி மற்றும் உலக திரைப்பட போட்டிக்கான விருதுகள், நிறைவு நாளில் வழங்கப்படும்.
தொடக்க விழாவில் இயக்குநர் தாரிக் சலேவின் ‘ஈகிள்ஸ் ஆப் தி ரிபப்ளிக்’ என்ற எகிப்து திரைப்படம் திரையிடப் படுகிறது. மொத்தம் 51 நாடுகளிலிருந்து 122 படங்கள் திரையிடப்படவுள்ளன.
இதில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 14 படங்கள், கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற 6 திரைப்படங்கள், பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற 3 திரைப்படங்களும் அடங்கும். மேலும் முதல் முறையாக உலக சினிமா பிரிவில் செயின்ட் ஹெலினா, ஜார்ஜியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், மியான்மர், நேபாளம் மற்றும் மாண்டினிக்ரோவில் இருந்து படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்திய பனோரமா பிரிவில் பிஹாரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட போஜ்புரி மொழி திரைப்படம் திரையிடப்படுகிறது.
இந்த திரைப்படவிழாவுக்கு 50 தமிழ் படங்கள் விண்ணப்பித்த நிலையில் தேர்வுக்குழுவால் 12 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 3 பிஹெச்கே, அலங்கு, பிடிமண், காதல் என்பது பொதுவுடமை, மாமன், மாயக்கூத்து, மெட்ராஸ் மேட்னி, மருதம், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ், பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி, வேம்பு ஆகிய 12 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.
மேலும் எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொழில்நுட்ப மாணவர்களின் 6 குறும்படங்களும் திரையிடப்படும். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ‘பாட்ஷா’ திரைப்படம் டிச.12-ம் தேதி திரையிடப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.