

ரஜினியின் 173-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு முடிந்தவுடன், இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஜினியின் 173-வது படத்துக்காக பல இயக்குநர்கள் கதைகள் கூறினார்கள். லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், நித்திலன், மடோன் அஸ்வின், ராம்குமார், அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் இதில் அடங்குவர். ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் சுந்தர்.சி தான் இயக்குநர் என்று அறிவிக்கப்பட்டது. பின்பு, அதன் இயக்குநர் பொறுப்பில் இருந்து சுந்தர்.சி விலகிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமாரின் படத்தில் ரஜினி நடிப்பார் என்று தகவல்கள் பரவின. அவர் கூறிய கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும் முழு திருப்தியுடன் அவர் இல்லை என்று தெரிவித்தார்கள்.
மேலும், கடந்த வாரம் ராம்குமாருக்கு தொலைபேசி வாயிலாக ‘நீங்கள் அப்பாவின் அடுத்த படத்தின் இயக்குநராக இல்லை. வேறு படம் பண்ணுங்கள்’ என்று கூறியிருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். ராம்குமார் இல்லை என்றவுடன் மீண்டும் ‘ரஜினி173’ இயக்குநர் யாராக இருக்கும் என்று திரையுலகினர் ஆர்வமாக எதிர்நோக்கி இருந்தார்கள்.
அஸ்வத் மாரிமுத்து மற்றும் சிபி சக்கரவர்த்தி இருவருமே தனித்தனியாக ரஜினியை சந்தித்து தங்களுடைய இறுதிக் கதையை தெரிவித்திருக்கிறார்கள். 173-வது படத்துக்காக கதைகள் கேட்கும் படலம் தொடங்கப்பட்டபோது, அதில் முதல் ஆளாக கதை கூறியவர்கள் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சிபி சக்கரவர்த்தி. அப்போதில் இருந்தே தனது கதையை ரஜினிக்கு தகுந்தாற் போல் மெருக்கேற்றிக் கொண்டே வந்தார்.
இடையே அவர் இல்லை என்று முடிவானவுடன் சிவகார்த்திகேயன், நானி உள்ளிட்டோர் படங்களை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. இதில் சிவகார்த்திகேயன் படத்தை பூஜை போட்டு தொடங்கும் அளவுக்கு சென்றது. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தாமதமானது.
அஸ்வத் மாரிமுத்து மற்றும் சிபி சக்கரவர்த்தி இருவரும் கூறிய கதையில், சிபி சக்கரவர்த்தி கதை மிகவும் ரஜினிக்கு பிடித்திருக்கிறது. இதனால் அக்கதையில் ரஜினி நடிக்கலாம் என்று தீர்மானித்து ராஜ்கமல் நிறுவனத்தின் மகேந்திரனிடம் தெரிவித்திருக்கிறார். அவரோ உடனடியாக நேற்று மாலை சிபி சக்கரவர்த்தியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்துக்குப் பிறகு முதலில் ரஜினியிடம் கதை சொன்னார் சிபி சக்கரவர்த்தி. ஆனால், அப்போது ஒர்க் அவுட் ஆகவில்லை. பின்பு 3 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு 2-வது படமாக ரஜினி படமே அவருக்கு அமைந்திருக்கிறது.