

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணி மீண்டும் இணையும் ‘பத்தா’ படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியானது.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி தரணிதரன். தொடர்ந்து தனது அடுத்த படமான ‘சீதக்காதி’யிலும் விஜய் சேதுபதியை இயக்கி இருந்தார். தற்போது மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைகிறது. ‘பத்தா’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லி தயாரித்து வெளியிடுகிறார்.
படம் குறித்த தகவலையும் அதன் முதல் தோற்றம் மற்றும் வெளியீட்டு தேதியையும் அட்லி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அட்லி தனது பதிவில், ‘கே-டவுன் ஹிஸ்ட்ரில கொஞ்சம் பக்கத்தை ஸ்கிப் பண்ணாம பார்த்தா, இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும்போது, அந்தப் படைப்பு அதிரடியானதா இருக்கும் என்பது உங்களுக்கு புரியும். ‘பத்தா’ அக்டோபர் 1-ல் திரையரங்குகளில் உங்களைச் சந்திப்பான்’ என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் வின்டேஜ் லுக்கில் இருக்கும் விஜய் சேதுபதியின் உதட்டில் ஒரு பீடி புகைந்து கொண்டிருக்கிறது.
சினி 1 ஸ்டுடியோவுடன் இணைந்து ஏ ஃபார் ஆப்பில் ஸ்டுடியோஸ் மூலமாக ப்ரியா அட்லி தயாரிக்க இருக்கும் இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை செல்வகுமார் எஸ்கேவும், படத்தொகுப்பு பணியை கலைவண்ணனும் மேற்கொள்கின்றனர்.