

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' படத்திற்கு சான்றிதழ் வழங்கும்படி தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய முறையான வாய்ப்பு வழங்காமல் தனி நீதிபதி பி.டி.ஆஷா அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கக் கூடாது என்று கூறியது.
இருப்பினும், ரிட் மனுவைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, தயாரிப்பு நிறுவனம் விரும்பினால், ரிட் மனுவை மீண்டும் விசாரணைப் பட்டியலில் சேர்த்து, தனி நீதிபதி முன்பு புதிய விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டது.
படத்தில் ராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அன்னிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமான புகார் வந்துள்ளதால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தீவிரமான புகார் கூறப்பட்டுள்ள நிலையில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டனர்.
மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து பட நிறுவனம் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி ஆஷாவின் தீர்ப்பை ரத்து செய்த இரு நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை தனி நீதிபதி ஆஷாவே மீண்டும் விசாரிப்பார் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.