

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் கடந்த 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இவர்களின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை எதிர்த்தும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து சங்கத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும், சங்க உறுப்பினரான நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.மரியா கிளேட் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சங்கங்களின் பதிவாளர் ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து இது தொடர்பாக எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.