

ரஜினி நடிக்கும் 173-வது படத்தின் இயக்குநர் யார் என்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. ‘ரஜினி 173’ படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அவரும் படத்தின் கதை, திரைக் கதையினை இறுதி செய்து பணிகளைத் தொடங்கினார்.
ஆனால், முன்பு ஒப்புக் கொண்ட தெலுங்கு படத்தினை இயக்குவதற்காக வாங்கப்பட்ட தொகையினை அளிப்பதில் சிக்கல் உருவானது. இதனால் ‘ரஜினி 173’ படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ‘ரஜினி 173’ படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்குவார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ள படத்தினை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரும் ஏஜிஎஸ் நிறுவனத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கினால் மட்டுமே ‘ரஜினி 173’ படத்தினை இயக்க முடியும்.
இதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழப்பத்தினால் ‘ரஜினி 173’ படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதே தெரியாமல் உள்ளது. இதுவரை முதற்கட்டப் பணிகளுக்கே பல லட்சங்களை செலவு செய்துவிட்டது ராஜ் கமல் நிறுவனம். இதனால் விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து ‘ரஜினி 173’ படத்தினை தொடங்க ராஜ் கமல் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.