

கவனமுடன் செயல்பட்டு சாதனையாளராக திகழ்பவர் அஜித்குமார் என்று ராதிகா புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமார் தனது படப்பிப்பு பணிகளுக்கு சற்று ஓய்வுகொடுத்துவிட்டு, கடந்த ஓர் ஆண்டாக மிசேலின் லீ மான் கோப்பை கார் பந்தையத்தில் பங்கேற்று வருகிறார். இந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அவர் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அஜித் லண்டன் சென்றிருக்கிறார்.
இதனிடையே லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய். இதைத்தொடர்ந்து முன்னணி சினிமா நட்சத்திரங்கள் லண்டனில் முகாமிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராதிகாவும் அங்கே சென்றுள்ளார்.அங்கே அவர் அஜித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவர் தோழமையுடன் அஜித்தைக் கட்டியணைத்து வாழ்த்தும் வீடியோ தனது சமூக வலைதளத்திலும் ராதிகா பகிர்ந்துள்ளார்.
அத்துடன் எழுதியுள்ள பதிவில் அவர், ‘கார் பந்தயத்தின் மீது தீராத ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் கவனத்துடன் செயல்பட்டு சாதனையாளராகத் திகழும் அதே வேளையில், எப்போதும் போல அடக்கமாகவும் வசீகரமாகவும் இருக்கும் அஜித்தைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; அவர் ஒரு சிறந்த முன்னுதாரணம்.’ என்று தெரிவித்துள்ளார்.
அஜித்தும் ராதிகாவும் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘பவித்ரா’ மற்றும் 1999-ம் ஆண்டில் வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
ஆகஸ்ட் 14-ம் தேதி சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ராதிகாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. முன்னதாக அவர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்த ‘தாய் கிழவி’ படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருந்தது.
அஜித்தைப் பொறுத்தவரை கடைசியாக அவர் 2025-ம் ஆண்டில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அவர், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கதை்தில் நடிக்க இருக்கிறார். அஜித் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘டேர் டெவில்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கார் ரேஸ் மீதான ஆர்வம் அதில் பங்கேற்பதற்கான அவரின் முயற்சிகள் போன்றவைகளை உள்ளடக்கி, ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஆவணப்படம் வெளிவர இருக்கிறது.