

நான் திரைப்படங்களுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். இப்போதும் அந்த நட்பு, அதே அன்போடு தொடர்கிறது. என்னை விட வயதில் மூத்தவர்கள், இளையவர்கள் என பெரும் வட்டம் அது.
அப்போது எனக்கு அறிமுகமானவர்களில் ஒருவர் வீரமணி. அவரை எங்கு, எப்போது முதன் முதலில் சந்தித்தேன் என்பது தெரியவில்லை. தென் மாவட்டத்துக்காரரான அவர் எம்.ஆர்.ராதாப்பாவின் நாடகக்குழுவில் இருந்திருக்கிறார். ராதாரவி அண்ணன் குடும்பத்துக்கு மிக வேண்டியவர்.
என் சகோதரி ஹேமமாலினி அவரை ‘வீரமணியண்ணே’ என்று அழைப்பார். நான் ‘பங்காளி’ என்று அழைப்பேன். அப்பாவியான மனிதர் அவர். விசுக்கென்று கோபம் வரும். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மறைந்து விடும்! டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும், டப்பிங் இன்சார்ஜாகவும், சில காலம் டப்பிங் யூனியன் தலைவராகவும் இருந்தார்.
அவரை எப்போதும் கிண்டல் செய்து கொண்டே இருப்பேன். அவரும் என்னை ‘டேய் சொட்டயா’ என்று கேலி செய்து கொண்டே இருப்பார். ஒரு முறை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாலை போட்டிருந்தோம். மாலை போட்டால் ‘சாமி’ என்று அழைப்பது வழக்கம். அவரை நான் வழக்கம் போல கிண்டல் செய்தேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது.
“சும்மாருடா...” என்று கோபமாகச் சொல்லி விட்டு பிறகு உடனே “சாமி” என்றார். எல்லோரும் சிரித்துவிட்டோம். இது போன்ற கேரக்டர் அவர். அவருடன் இருந்தால் ஜாலியாக இருக்கும். டப்பிங்கில் எங்களில் சிலருக்கு வேலை இல்லாத நேரத்தில் பொழுதுபோக்காக ரம்மி விளையாடுவோம்.
திடீரென்று, “போன ஆட்டத்துக்கு முதல் ஆட்டத்துல அந்த கார்டை நீ போட்டுருக்கக் கூடாது” என்பார். நான் அவரைப் பார்த்து “அது முடிஞ்சு போச்சு பங்காளி! இப்ப புது ஆட்டத்தை ஆடறோம். இதை பத்தி பேசுவோம்” என்று சொல்வேன். “இல்ல நீ, அந்த கார்டை போட்டதாலதான் அவன் அடிச்சான்” என்பார்.
பிறகு, “நீ என்ன கார்டு போட்டே?” என்று ஒவ்வொருவரிடமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். “யோவ். நாங்க போட்டதை போட்டாச்சு. அடுத்தால நீதான் போடணும்” என்போம். “அப்படியா?” என்பார், அப்பாவியாக. பிறகு அவர் கையில் அதிகமான கார்டு இருப்பது போல தெரியும். என்ன இவ்வளவு கார்டு வச்சிருக்காரு என்று அவரைச் எண்ணச் சொல்வோம்.
“கரெக்டா 14 கார்டு இருக்கு, அதுக்கென்ன?” என்பார். “ரம்மிக்கு 13 கார்டுதான் இருக்கணும்” என்று சொன்னால், “சரி இந்தா ஒரு கார்டை போட்டுடுறேன்” என்பார். இப்படியான ஆள் அவர். ஒரு நாள், செலவுக்குப் பணமில்லை என்ற கவலையில் சோகமாக அமர்ந்திருந்தேன். பக்கத்தில் நாடக நடிகர் திருப்பூர் கிருஷ்ணன் என்பவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு திருமணமாகவில்லை.
“சொட்டையனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கலைன்னு ரொம்ப சோகமா இருக்காம் பாரு” என்று வீரமணி என்னை கிண்டல் செய்தார். நான் அமைதியாக இருந்தேன். பிறகு, “நான் ஒண்ணு சொல்றேன், கேட்கிறியா?” என்றார், வீரமணி. “என்ன?” என்பது போல தலையாட்டினேன். “என் மச்சினியை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்டார்.
“ஒரு குடும்பத்துக்கு ஒரு கிறுக்கன்தான் மாப்பிள்ளையா இருக்கணும்” என்றேன். திருப்பூர் கிருஷ்ணன் அண்ணன் புகையை இழுத்துக் கொண்டிருந்தவர், அப்படியே குபுக்கென சிரித்து இருமி விட்டார்! அவருக்கு சிரித்து சிரித்து இருமல் நிற்கவில்லை. சிகரெட் புகை மூக்குக்குள் போய் சிக்கலை ஏற்படுத்தி விட்டது! வீரமணியும் விழுந்து விழுந்து சிரித்தார். இப்படியெல்லாம் ஜாலியாக ஒரு குடும்பம் போல பழகி, பேசிக் கொண்டிருப்போம்.
நான் டப்பிங் தியேட்டர் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது இயக்குநர் ஒருவர் வந்தார். அவர் பெயர் வேண்டாம். நல்ல மது போதையில் இருந்தார். நேராக வந்தவர் என்னை பார்த்ததும் அழுதார். நான் பதறி, “ஏன் அழறீங்க?” என்று கேட்டேன். “நான் ஊரோடு போகப் போகிறேன். என்னால முடியலை. எனக்கு கொஞ்சம் பணம் வேணும். கொடு” என்று கேட்டார்.
“அந்தளவுக்கு என்னாச்சு?” என்று கேட்டேன்! “என் மனைவி இறந்துட்டாங்க. அவங்களுக்கு ப்ளட் கேன்சர். இனிமே இங்க இருந்து என்னால வேலை பார்க்க முடியாது. ஊருக்கே போறேன்” என்று மீண்டும் அழுதுகொண்டே சொன்னார். எனக்கு அவர் மேல் பரிதாபம் வந்தது. அப்போது டப்பிங்கில் எனக்கு ‘கன்வேயன்ஸ்’ 50 ரூபாய் தருவார்கள். அதை போய் வாங்கி வந்து அவரிடம் கொடுத்தேன்.
ராதாரவி, வீரமணி
மறுநாள் டப்பிங் முடிந்து இரவில், கோடம்பாக்கம் ஹாலிவுட் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வீரமணியும் அதே டைரக்டரும் அங்கு வந்தார்கள்! முந்தைய நாள் என்னை சந்தித்ததோ, என்னிடம் பணம் வாங்கியதோ அவருக்கு ஞாபகத்தில் இல்லை. வீரமணி என்னை பார்த்ததும் நேராக வந்து பேசிக் கொண்டிருந்தார். “உட்காரு பங்காளி, சாப்பிடு!” என்றேன்.
வீரமணி, “இல்ல, அவரு மனைவி கர்ப்பமா இருக்காங்க. அவங்களுக்கு டிபன் வாங்கணும்னு சொன்னார். அதனால நானும் அவர் கூட வந்தேன் என்று சொன்னதும் எனக்கு ஜிவ்வென்று கோபம் ஏறியது. அப்போது நான் கொஞ்சம் முரட்டுத்தனமாக அலைந்து கொண்டிருந்த நேரம்! “ஓரே ஒரு நிமிஷம் பொறு. அந்த ஆளை தூக்கிப்போட்டு மிதிச்சுட்டு வர்றேன்” என்று எழுந்தேன்.
“ஏன், எதுக்குப்பா... பொறு” என்று என்னை அடக்கினார். முந்தைய நாள் நடந்ததை சொன்னேன். கர்ப்பிணி மனைவியை இறந்துவிட்டதாகச் சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு அடியாவது அந்த ஆளை அடிக்க வேண்டும் என்று முண்டிக் கொண்டு நின்றேன்.
“சரி சரி விடு. தண்ணி போடறதுக்கு பொய் சொல்லி காசு வாங்கியிருப்பாரு.. விடு” என்றார்.
மிகவும் வேதனைப்பட்டேன். மது, ஒருவனை எந்தளவுக்கு அடிமையாக்கி விடுகிறது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டேன்!அதுக்குப் பிறகு அந்த இயக்கு நரை சந்திக்கவே இல்லை. வீரமணிதான் அவருக்கு உதவிகள் செய்தார். பணம் இருக்கு என்றால் இருக்கு என்பார். இல்லை என்றால் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுவது வீரமணியின் கேரக்டர்.
அவர் புகை பிடிப்பவர்
ஒருமுறை வெளிநாட்டு சிகரெட் பாக்கெட் ஒன்றை வாங்கி அதை குடித்திருக்கிறார். அதிலிருந்து அந்த சிகரெட் மீது அவருக்கு பிரியம் வந்துவிட்டது. “நீ குடிக்கும் சிகரெட் பெயரை சரியாக சொல்லிவிட்டால், ஒரு வருடம் முழுவதும் நீ எந்த படத்துக்கு இன்சார் ஜாக இருக்கிறாயோ, அதற்கு சம்பளம் வாங்காமல் டப்பிங் பேசுகிறேன்” என்று சொன்னேன்.
அவருக்கு பேசும்போது கொஞ்சம் திக்கும். அவர், “போடா” என்பார். அந்த சிகரெட், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ். அதை பங்காளி ‘பென்சன் எக்ஸஸ்’ என்றே சொல்வார்.அருகில் இருந்த ராதாரவி அண்ணன் “அவனுக்குத்தான் வரலையே, பேசாம விடேன். எதுக்குடா அவன் உயிரை எடுக்கிறே” என்றார்.
உடனே நான், “இதை எப்படி போய் கடையில கேட்பே?” என்று வீரமணியிடம் கேட்டேன். “அதுக்குத்தான்டா ஒரு ஐடியா வச்சிருக்கிறேன். இந்த சிகரெட் முடிஞ்சதும் பாக்கெட்டை பத்திரமா வச்சிருந்து, அதைக் காண்பிச்சு வாங்கிட்டு வருவேன்” என்றார். “இப்படி பெயர் சொல்ல வராத சிகரெட்டை குடிக்கணுமா?” என்று நாங்கள் விளையாடுவோம்.
ஒரு முறை, ராதாரவி அண்ணன், வீரமணி எல்லோரும் சபரிமலைக்கு செல்லும்போது பெரிய பாதையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறி இருக்கிறார்கள்! அப்போது, “வீரமணி, நீதான் கவிதை பாட்டெல்லாம் எழுதுவேன்னு சொன்னியே, இப்ப ஒரு பாட்டு எழுதேன்” என்று ரவி அண்ணன் கேட்டதும், “சுச்சுவேஷன் சொல்லாம எப்படி எழுத?” என்றிருக்கிறார் வீரமணி.
“ஒரு ஊரில் ஒரு நல்லவன், அவன் கெட்டவனாகிட்டான். அதை வச்சு எழுது” என்று சொல்ல ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை. “கேட்கிறீங்களா என்றிருக்கிறார் வீரமணி. “அதுக்குள்ள எழுதிட்டியா? என்னய்யா அதிசயமா இருக்கு?” என்று ராதாரவி அண்ணன் ஆச்சர்யப்பட, “வார்த்தை வந்தா எழுதிட வேண்டியதுதானே! கேளுங்க” என்ற வீரமணி, ராதாரவி அண்ணன் சொன்ன வார்த்தைகளையே பாடி காண்பிக்க, “இது பாடலா? பாட்டெழுத சொன்னா, நான் சொன்னதை வச்சே பாடி காண்பிக்கிறியா?” என்று அவரை பொய்யாக அடிக்கப் போக, அனைவரும் சிரித்தார்கள்.
இப்படி ஜாலியான கலகலப்பான மனிதர், பங்காளி வீரமணி. கரோனா காலத்தில் ஒருநாள் திடீரென காலமாகி விட்டார். போய் பார்க்க முடியவில்லை என்றாலும் எப்போதும் என் மனதில் இருக்கிறார் என் “பங்காளி வீரமணி".
(திங்கள்தோறும் பேசுவோம்)