

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வரும் சூழலில், அது குறித்து நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல்களில் சிக்கியுள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து அந்த பேட்டியில் பேசிய மகேந்திரன், “கரன்ட் போகுதா? சோலார் சிஸ்டம் என்று ஒன்று கண்டுபிடித்தார்கள். யாராவது அதை முயற்சி செய்தீர்களா? இவ்வளவு நாட்களாக பவர்கட் இல்லாமல் ஜாலியாக இருந்தீர்களா? ஒரு ஆறு மாதம் எதுவும் கேள்வி கேட்காதீர்கள். என் வீட்டில் இருந்து கூட கரன்ட் எடுத்துக் கொள்ளுங்கள். மைக் முன்னால் நின்று ஏன் இப்படி நடந்தது என்று கேள்வி கேட்டால் மட்டும் உடனே மின்சாரம் வந்துவிடுமா? எவ்வளவு ஆண்டு கேள்விக் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்? கேள்வி கேட்பதை நிறுத்தினால்தான் உங்களுக்கு பதில் கிடைக்கும்” என்று பேசியுள்ளார்.
அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகளால் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பலரும் புலம்பி வரும் வேளையில், மகேந்திரனின் இந்த பேச்சு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்களின் அன்றாட பிரச்சினையை இவ்வளவு அலட்சியமான உடல்மொழியுடன் பேசுவதா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
மேலும் திமுக ஆட்சியின் போது அனைவரும் அரசிடம் இறங்கி கேள்வி கேட்க வேண்டும் என்று மகேந்திரன் பேசிய வீடியோ ஒன்றையும் தற்போது பேசியிருக்கும் வீடியோவையும் இணைத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.