

விஜய் தொடர்பாக பேசிய விவகாரம் தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் – சங்கீதா – த்ரிஷா மூவரையும் மையப்படுத்தி சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலானது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், “விஜய் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விஜய்யை நான் அறிந்தது ஒரு மரியாதையான, அமைதியான, மென்மையான இணை நடிகராக மட்டுமே. அவருடைய தாயாரைப் பற்றியும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்கும் மேலாக எனக்கு எந்த தனிப்பட்ட அறிவும் இல்லை.
சமீபத்தில் நான் ஒரு மேடையில் பேசிய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, விஜய்யின் அரசியல் வருகைக்கும் இப்போது பேசப்படும் தனிப்பட்ட விஷயங்களுக்கும் தவறாக இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டபோது, மக்கள் தனிப்பட்ட விஷயங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் தனித்தனியாக பார்க்கத் தெரிந்தவர்கள் என்று தான் நான் கூறினேன். மேலும், இது தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயம் அளவுக்கு மீறி பெரிதாக்கப்படுகிறது என்றும் சொன்னேன்.
இன்னும் ஒரு விஷயம்—பெண்களின் நலன் குறித்து உண்மையாக அக்கறை இருப்பின், நீதிக்காக போராட வழியில்லாமல், சட்ட உதவியோ பொருளாதார ஆதரவோ இல்லாமல், அடுத்த உணவு கூட உறுதியில்லாமல் வாழும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் இதே அளவு கவனம் செலுத்தப்பட வேண்டாமா? இந்த அறிக்கை என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஏற்பட்ட தவறான புரிதலை சரி செய்யவும் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.