

ரஜினியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோவை பகிர்ந்துள்ள நடிகை கயாடு லோஹர், ‘அது நடந்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை’ என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கயாடு லோஹர், தொடர்ந்து ‘இதயம் முரளி’ படத்தில் நடித்திருந்தார்.
இவர் சமீபத்தில் தான் மேற்கொண்ட ஹைதராபாத் விமானப் பயணம் மறக்க முடியாத கனவுப் பயணமாக மாறியதாக தெரிவித்துள்ளார். அதற்கு, அவரது பக்கத்து இருக்கையில் இருந்தது ரஜினிகாந்த் என்பதே காரணம் என்றும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கயாடு லோஹர், ‘ரசிகை ஒருவருக்கு விமான பயணம் ஒன்றில் ரஜினிகாந்த் சார் அருகில் அமர்ந்து செல்லும் அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
அது நடந்தது என்று இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. நான் அவரை பார்த்த நொடியில் ‘சுந்தரி’ பாடல் என் மனதில் ஒலிக்கத் தொடங்கியது. நான் ஒரு கனவு உலகத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டேன்.
என்ன ஒரு எதிர்பாராத தருணம். என்னுடைய நாள் முழுமை அடைந்தது. ஒருநாள் அவருடன் இணைந்து நடிக்கவும் செய்வேன் என்று நம்புகிறேன். நான் உருளைக்கிழங்கு போல தெரிகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
கயாடு லோஹர் தற்போது, ‘இம்மோர்டல்’, ‘மஞ்சணத்தி’ ‘சூர்யா 48’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.