

சென்னை: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.147 கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இத்திரைப்படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வீரபத்ருடு’ என்ற பெயரில் வெளியானது.
இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் ரூ.80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், வெளிநாடுகளில் ரூ.42 கோடியை ஈட்டியுள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிக அதிகமான ஓபனிங் வசூலைப் பெற்ற திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது. வார இறுதி நாட்கள் முடிவடைந்த பின்னரும், திங்கட்கிழமையான இன்றும் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவுகள் வலுவாக உள்ளதால், படத்தின் வசூல் வரும் நாட்களிலும் நிலையாக இருக்கும் என சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், “கருப்பு திரைப்படத்துக்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த அன்போடு வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.