

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. ‘பராசக்தி’ படத்துக்கும் ஏராளமான திருத்தம் மற்றும் ‘கட்’களுக்கு பிறகுதான் தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதனால் கடுமையான விமர்சனங்களை தணிக்கை வாரியம் எதிர்கொண்டிருக்கும் நிலையில் நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. அது பகுத்தறிவால் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர, தெளிவற்ற தன்மையால் முடக்கப்படக் கூடாது. இது எந்த திரைப்படத்தையும் விடப் பெரியது.
இது, ஜனநாயகத்தில் கலைக்கும் கலைஞர்களுக்கும் ஓர் அரசியலமைப்பு வழங்கும் இடத்தைப் பிரதிபலிக்கிறது. அதை ஒருபோதும் தெளிவின்மையால் குறைக்க முடியாது. சினிமா என்பது ஒரு நபரின் படைப்பு மட்டுமல்ல, எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், மற்றும் சிறு வணிகங்களின் கூட்டு முயற்சியாகும். அவர்களின் வாழ்வாதாரத்தையும் சார்ந்துள்ளது.
தெளிவு இல்லாதபோது, படைப்பாற்றல் கட்டுப்படுத்தப்படும், பொருளாதார செயல்பாடு தடைபடும், மக்களின் நம்பிக்கை பலவீனமடையும். தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள சினிமா ஆர்வலர்கள், கலைகள் மீது ஆர்வம், புரிதல் மற்றும் முதிர்ச்சியைக் கொண்டுள்ளனர்; அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் மரியாதைக்குத் தகுதியானவர்கள்.
இப்போது தேவைப்படுவது, தணிக்கை சான்றிதழுக்கான வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு ‘கட்’ அல்லது திருத்தத்துக்கு எழுத்துப்பூர்வமான, காரணத்துடன் கூடிய விளக்கத்துடன், சான்றிதழ் வழங்கும் செயல்முறைகளை கொள்கை ரீதியாக மறுபரிசீலனை செய்வதாகும்.
திரையுலகம் ஒன்றுபட்டு இது தொடர்பாக அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டிய தருணமும் இதுதான். இதுபோன்ற சீர்திருத்தங்கள் படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தும். கலைஞர்கள் மற்றும் மக்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.