

இணையத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான விவகாரம் தொடர்பாக, எடிட்டர் சங்கத்தில் இருந்து பிரதீப் இ.ராகவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்தை இணையத்தில் லீக் செய்து தொடர்பாக தமிழக காவல் துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்தின் எடிட்டரான பிரதீப் இ.ராகவை தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில், “படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்டவிதிகளை மதிக்காமல் தொடர்ந்து ‘ஜனநாயகன்’ உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது. மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் இ.ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தால் திரைப்பட துறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்துக்கு உள்ளது.
திரைத் துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டி 17.04.2026 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி படத்தொகுப்பாளர்கள் முன்னிலையில் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துகளை கவனத்தில் கொண்டு பிரதீப் இ.ராகவை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் இடைநீக்கம் செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.
இந்த இடைநீக்க காலத்தில் சங்கம் பிரதீப் இ.ராகவுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காது எனவும், மேலும் சகோதர சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு முழு ஆதரவு தருமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.