

தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார் விமர்சனம் செய்திருக்கிறார்.
2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2017-ம் ஆண்டிற்கு ’அறம்’ சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை இப்படத்தின் இயக்குநர் கோபி நயினார் விமர்சனம் செய்திருக்கிறார்.
இது தொடர்பாக கோபி நயினார் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குநருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டிருப்பேன். உலகம் முழுவதும் முதலாளித்துவத்தை பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இருவேறு பிரிவுகளாக பிரிக்கும்.
உரிமை கோருபவர்களை தன் அமைப்புக்கும் அரசுக்கும் எதிரானவர்களாகவும் தன்னிடம் சமரசமாகிறவர்களை அவ்வப்போது பரிசுகளை கொடுத்து மகிழ்வித்து போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
‘அறம்’ படத்துக்குப் பின்பு ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தினை இயக்கியுள்ளார் கோபி நயினார். இப்படமும் தணிக்கை பிரச்சினையில் சிக்கி இப்போது தான் வெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.