

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் விளிம்பு நிலை மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கட்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.
தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாண்டிராஜ் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் பயணிக்கப்போகும் அனைத்து அமைச்சர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் திட்டங்களால் எளிய மக்களின் வாழ்வைச் செதுக்குங்கள்.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் விளிம்பு நிலை மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கட்டும். வசூலில் சாதனை படைத்த உங்கள் கரங்கள், இனி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் சாதனை படைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.