

திரைப்பட நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதையொட்டி, அவரது பிறந்தநாளான நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, கமல்ஹாசன் எம்.பி., நடிகர் பார்த்திபன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நடிகர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை பாக்யராஜ் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திரைத்துறையில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ‘16 வயதினிலே’ படத்தில் எனக்கு முதல் முறையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.
வாய்ப்பு தேடும் காலத்தில் பலரிடம் என்னுடைய உண்மையான பெயரைச் சொல்லாமல் கோவை ராஜா என்று கெத்தாகச் சொல்லிக் கொள்வேன். ‘16 வயதினிலே’ படத்தில் தான் என் பெயரை பாக்யராஜ் என்று வைத்தேன்.
என்னுடைய அம்மா எனக்கு வைத்த பெயர் இதுதான். டைட்டில் கார்டில் பார்த்துவிட்டு, இது யார் பெயர் என்று இயக்குநர் பாரதிராஜா கேட்டார்.
பிறகுதான் அது நம்முடைய ராஜன் என்று சொன்னார்கள். அம்மாவின் பாக்கியத்தை இழந்து விடக்கூடாது என்பதால் கே.பாக்யராஜ் என்று வைத்துக் கொண்டேன்.‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் போது என்னுடைய இயக்குநர் எனக்குப் பிறகு ராஜன் தான் என்று சொன்னார். துணை இயக்குநர், வசனகர்த்தா,திரைக்கதை எழுத்தாளர், பின்பு நடிகர் என படிப்படியாக வந்தேன்.
எனது தாயார், `உன்னுடைய இயக்குநரே உன்னை கதாநாயகனாக வைத்து படம் எடுப்பார்' என்று சொன்னார். அது உண்மையிலே நடந்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பு எனது தாயார் இறந்தது. வருத்தமாக இருந்தது. ரஜினி சாரை ‘16 வயதினிலே’ படத்தில் பார்த்தேன். அன்று பார்த்தது போல இன்றும் இருக்கிறார். சினிமாவில் 50 வருடங்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அடுத்ததாக ஒரு வெப் தொடரும், ஒரு படமும் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்.இவ்வாறு கே.பாக்யராஜ் கூறினார்.