

சசிகுமார் மற்றும் இயக்குனர் பாலா
சிறந்த நடிகர் விருது வென்றிருப்பதை முன்னிட்டு சசிகுமாருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கிறார் பாலா.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்காக சிறந்த நடிகர் என்ற விருதினை வென்றார் சசிகுமார். இதற்காக இயக்குநர் பாலா சசிகுமாருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கிறார்.
அக்கடிதத்தில், “சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் ’டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம்.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன்.
உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமைக் கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.
இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் ‘சம்பவக்காரன்’ சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார் பாலா.
இந்தக் கடிதத்தினை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து சசிகுமார், “தேசிய (விருது) அங்கீகாரம் தந்த பாலா அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.